Sunday, 28 September 2014

முதல்வர் ஜெயலலிதா கைது ! CM Jayalaitha arrest ...

ஒரு தமிழனாக நம்முடைய முதல்வர் அண்டை மாநிலத்தில் சிறைப் படுத்தப்பட்டு இருப்பது எனக்கு வருத்தமே; அதே சமயம் ஊழல் மலிந்த தேசமாக என் தேசம் மாறிவிடக் கூடாது. குற்றம் யார் செய்தாலும் குற்றமே, இல்லையேல் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
அதே சமயம் இந்தக் கடுமையான நீதி விசாரணை மற்ற ஊழல் அரசியல் வாதிகள் மீதும் நடத்தப்பட வேண்டும், இதில் பார பட்சம் காட்டக் கூடாது.
ஜெயலலிதா மட்டும் குற்றவாளி அல்ல ! 

இன்னமும் பெரிய திருடர்கள், ஊழல் அரசியல்வாதிகள் வெளியில் சுதந்திரமாகத் தான் இருக்கிறார்கள். சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது; இனியும் செய்ய வேண்டும் !


தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம் !
எப்படி "ஸ்ரீ ராமன் 14 ஆண்டுகள் காட்டில் வன வாசம் இருந்த பொழுது, பரதன் பத்திரமாக நாட்டை ஆட்சி செய்து மீண்டும் ராமன் வந்தவுடன் ஆட்சியைத் திருப்பிக் கொடுத்தானோ " அது போல பன்னீர் செல்வமும் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து மீண்டும் "அம்மா" விடம் வழங்குவார். 

அம்மா மீண்டும் முதல்வராவார் !

Thursday, 25 September 2014

அனைவர்க்கும் நவராத்திரி நல் வாழ்த்துகள் ...Happy Navarathiri ...

அன்னை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பராக்கிரம வீரமும்
அன்னை ஸ்ரீ லக்ஷ்மியின் குறையாத செல்வ வளமும்
அன்னை ஸ்ரீ சரஸ்வதியின் பெருமைமிகு கல்வி வளமும் 
ஒருங்கேக்கிடைக்கும் பொன் நாட்கள் இந்த நவராத்திரி நாட்கள் ...
(September 25 - October 3, 2014)

ஸ்ரீராம பிரான் வனவாசம் சென்ற சமயத்தில் தன் மனைவியை இழந்தான். கடல் கடந்து சென்று சீதையை எவ்வாறு மீட்பது என்று ஏங்கினான். அதனை உணர்ந்த நாரதர் "ஸ்ரீராமா! நவராத்திரியில் அம்பிகையை முறையாக வணங்கினால் சீதையை மீட்பதற்கான அருள்கிட்டும்'' என எடுத்துக்கூறினார். 

அதோடு நாரதரே ஸ்ரீராமருக்கு குருவாய் இருந்து மாலியவான் மலையில் நவராத்திரி பூஜையினை உபதேசித்தார். ஸ்ரீராமரும் மாலியவான் மலையில் நாரதர் முன் அம்பிகைக்கு நவராத்திரி பூஜை செய்து, தன்னை மறந்து அம்பிகையின் நினைவால் மந்திரத்தை ஓதினார். ஸ்ரீராமரின் பூஜைக்கு மகிழ்ந்த அன்னை, ஸ்ரீராமருக்கு மாலியவான் மலையில் சிம்ம வாகனத்தில் காட்சிளித்தான். 

பிறகு அவன், "ஸ்ரீராமா! உனக்குத் துணையிருப்போர் அனைவரும் வெறும் வானரர் (குரங்கு) அல்ல. தேவர்கள் என்று அறிவாய்! உனக்கு அனைத்தும் அளித்தோம். வெற்றி கொள்வாய்!'' என்று அருளி மறைந்தாள். ராமப-பராவண யுத்தம் நடந்தது. யுத்தத்தில் ராவணன் தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் இழந்தான்.

அனைத்தையும் இழந்த ராவணன் தன் குலதேவதை துர்க்கையை நினைத்து வணங்கினான். ராவணனுடைய இஷ்ட தேவதையும் துர்க்கையே. ராவணன் நினைத்த உடனேயே துர்க்கை அவன் முன் தோன்றினாள். ராவணன் துர்க்கையை வணங்கி, "அன்னையே! நீ என் சாரதியாய் ஆக வேண்டும்'' என வேண்டினான். 

ராவணனின் பிரார்த்தனைக்கு ஏற்ப துர்க்கை அவன் தேரில் சாரதியாய் நின்றாள். `கலியுகத்தில் தீயவர்களே அதிக பலம் பெறுவர். தனது பணத்தாலும், பதவியாலும், பலத்தாலும், ஆணவத்தாலும் தீயவரே அதிகமாயிருந்து நல்லவர்களைத் தளர்ச்சி அடையச் செய்வர்' என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவே துர்க்கை ராவணனுக்குச் சாரதியாய், 18 கைகளில் ஆயுதங்களை ஏந்தி நின்றாள். 

இதைப் பார்த்த ஸ்ரீராமர் மனம் தளர்ந்தார். தனது கோதண்டத்தைக் கீழே போட்டு விட்டு "தேவி!'' எனக் கதறித் துதித்தார். எனினும், தேவி செவி சாய்க்கவில்லை. ஸ்ரீராமரை நோக்கித் தேரைச் செலுத்தினான். 

இதைப் பார்த்த ஸ்ரீராமர் மிகவும் தவித்தார். "வேறு வழி இல்லையே!'' என்று மீண்டும் மனமுருகி அன்னையைத் துதித்தார். "வெற்றி பெறுவாய் என நீதானே ஆசியளித்தாய். இப்போது அதற்கு நான் தகுதி இல்லையா, என்று ஸ்ரீராமர் கதறினார். 

"அன்னையே! உன்னை என் எதிரியின் தேரினில் சாரதியாய்ப் பார்ப்பதற்கா எனக்கு இரு கண்கள் இருக்கின்றன? அவற்றால் இனி என்ன பயன்? இப்போதே எனது இரண்டு கண்களையும் எடுத்து உனக்குக் காணிக்கையாக அளிக்கின்றேன்'' என்று தன் அம்புகளால் தன் கண்களை நோண்ட முற்பட்டார். 

இதனைக் கண்டதுமே அம்பிகையானவள் ராவணனின் தேரிலிருந்து மறைந்து விட்டாள். ராவணன் பலகோடி யுகங்களாய் நவராத்திரி பூஜையினை விடாது செய்தவன். 

நவராத்திரி பூஜையை விடாது செய்த புண்ணிய பலத்திற்காக அம்பிகையானவள் சிறிது நேரம் சாரதியாய் அமர்ந்தாள். பலநாள் தொடர்ந்து பூஜை செய்தாலும் அதர்மத்தின் வழிச் செல்பவனுக்குச் சிறிது நேரமே. 

ஆனால், தர்மத்தின் வழி செல்லும் ஸ்ரீராமன் மாலியவான் மலையில் ஒன்பது நாள் மட்டுமே செய்த பூஜையால் மனமகிழ்ந்த தேவி, ராவணன் தேரை விட்டு மறைந்து அவனை வெற்றி கொள்ளும் சக்தியையும் கொடுத்தாள். இதனால் போரில் ராமர் வெற்றி பெற்றார்.
______________________________________
ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எழுந்தருளிருக்கும் அம்மன் ஆதிபராசக்தியாக காட்சியளிப்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரித் திருவிழா கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறுவதைப் போல சேதுபதி மன்னர்கள் காலம்தொட்டே வெகுச் சிறப்பாக இன்றும் தொன்று தொட்டு நடைபெற்றுவருகிறது. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு தினமும் ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் கவியரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை பாட்டரங்கம், பொம்ம லாட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளும், தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

Friday, 12 September 2014

தமிழ் மொழி பொறியியல் கல்லூரிகளில் தடம் பதிக்க வேண்டும் ...

மாநில அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் என் இரண்டு கோரிக்கைகள் ...

(1) தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஆண்டிற்கு  ஒருமுறை தமிழில் பேச்சுபோட்டி, கட்டுரைப்போட்டி நடத்தவேண்டும்.

(2) இளங்கலை பொறியியல் ( B.E.,) படிப்பில் "இந்திய கலாச்சாரம்" என்ற ஒரு புதிய படத்தைத் தமிழில் தொடங்கவேண்டும்.
  (பள்ளிகளில் உள்ள "அறிவியல் தமிழ்" பாடம் போல்)



Tuesday, 26 August 2014

வீரத் துறவி சுவாமி விவேகானந்தரின் புரட்சி மொழிகள் ... Swami Vivekananda's Revolutionary Words ...

"உலக தேசங்களே ! எங்கள் சிறுவர்கள் பசியோடும், பட்டினியோடும் இருகிறார்கள், அவர்களுக்கு உணவளிக்க "நீங்கள் பணம் கொடுங்கள் " அதற்குப் பதிலாக இந்தியாவில் இருந்து "ஆன்மீக வளங்களை, ஆன்மீகச் செல்வங்கள்" நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், என்தேசத்து மக்களுகாக நான் உங்களிடம் கை ஏந்தி பிச்சை கேட்கிறேன் " என்று எம் மக்களுக்காக அழுதவன்,போராடியவன், உழைத்தவன், என் தேசத்தலைவன் வீரத் துறவி விவேகானந்தன்.

"பலவீனத்திற்குப் பரிக்காரம் பலத்தை நினைப்பதே தவிர பலவீனத்தை நினைப்பதல்ல"

"ஆன்மீக ஒளியே உலகிற்கு இந்தியாவின் நன்கொடை ... " 


"தலைவரிடம் ஒழுக்கம் இல்லாதபோது, அவர்மீது நம்பிக்கையோ ஈடுபாடோ ஏற்பட முடியாது. தலைவர் தூய்மையானவராக இருக்கும்போதுதான், அவர் மீது நிலையான விசுவாசமும், ஈடுபாடும் ஏற்பட முடியும்" 

"தூய்மை மற்றும், மெளனத்தில் இருந்து ஆற்றல் மிக்க சொற்கள் பிறக்கின்றன"


"ஓர் இளம் விதவைப்பெண்ணின் கண்ணீரைத் துடைக்காத; ஓர் ஏழைச் சிறுவனின் பசியைப் போக்காத எந்த ஒரு மதத்தையும் நன் மதமாகவே நினைத்ததில்லை "

"மனிதனை பாவி என்று சொல்லாதே "நீ தெய்வம் " என்று அவனிடம் சொல்"


"பசியால் ஒரு "நாய்" வாடினால் கூட அதற்கு உணவளிப்பதே என் மதம் "


"பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், "நீ உன்னை பலவீனன்" என்று நினைப்பதே" 

கடலின் ஆழத்தை அளக்கபோகின்ற உப்புப் பொம்மை கடலிலேயே கரைந்துவிடுவது போன்றதே சாதாரண மனிதர்களின் நிலை ...

நீ அறியவேண்டிய தெல்லாம் ஒன்று தான் "உன்னால் எதுவும் முடியும்" "நீ அழியாத பிரம்மம் என்பதுதான்" 


"எந்த வீட்டில் பெண்ணின் ஒரு துளி கண்ணீர் விழுகிறதோ, அந்த வீட்டில் கடவுள் மகிழ்ச்சி அடைவதில்லை; அந்த வீடு நாசம் அடைகிறது " 


"நீ வேண்டுவதை எல்லாம் கடவுள் கொடுத்து விட மாட்டார், உனக்கு என்னத்தேவையோ அவற்றை அனைத்தையும் கொடுத்துவிடுவார் ! " 

பசியால் துடிப்பவனிடம் மதப் பிரச்சாரம் செய்வது அவனை அவமானபடுத்துவதாகும் ! 

Monday, 25 August 2014

கடவுளின் பத்து அவதாரமும் (தசாவதாரம் ) "டார்வினின்" பரிணாம வளர்ச்சியும் ...(Dashavatara and Darwin)

1வது  அவதாரம் - மச்ச அவதாரம் (மீன்) - நீரில் வாழும் உயரினம். உயரினங்கள் முதன் முதலில் நீரில் தான் தோன்றின(டார்வின் கூற்றுப்படி) உதாரணம் ஒரு செல் உயரி "அமீபா" உலகில் தோன்றிய முதல் உயரினம்.

2வது அவதாரம் - கூர்ம அவதாரம் (ஆமை) - நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது.

3வது அவதாரம் - வராக அவதாரம் (பன்றி) - நிலத்தில், குறிப்பாக சகதியில் (நீரும் மண்ணும் கலந்தது) குட்டைகளின் அருகில் நீர்நிலைகளின் அருகில் வாழக்கூடியது.

4வது அவதாரம் - நரசிம்ம அவதாரம் (சிங்கமும் மனிதனும் இணைந்தது) - மிருக குணமும், மனித குணமும் இணைந்தது, மனிதனுக்கு முந்திய பிறவி. மிருக இயல்பே மேலோங்கி இருந்தது. 

5வது அவதாரம் - வாமன அவதாரம் (குட்டையான மனிதன்) - முதலில் தோன்றிய சிறிய மனிதன்.

6வது அவதாரம் - பரசுராம அவதாரம் - முரட்டு மனிதன், காடுகளில் ஆயுதங்களுடன் வாழும் கடின மனிதன். 

7வது அவதாரம் - ராம அவதாரம் - முழுமையான மனிதன் ; சமுதாயமாக வாழும் ; சூது ; பொய்; சினம் கொள்ளாத மனிதன். நல்லவன்.

8வது அவதாரம் - கிருஷ்ணா அவதாரம் - அரசியலில், கால்நடை வளர்ப்பில் திறமையான மனிதன். சூப்பர் ஹீரோ.

9வது அவதாரம் - பலராம அவதாரம் - விவசாயத்திற்கு முன்னுரிமை; பூரண அறிவைத் தேடும் மனிதன். 

10 வது அவதாரம் - கல்கி அவதாரம் - "தீய செயல்கள்" செய்யும்
 மனிதனை அளிக்கும் கடவுளின் இறுதி அவதாரம். 

"சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை நீக்க; சமூகா சேவை செய்யும் ஒவ்வொரு மனிதனும் கல்கி அவதாரமே !" 

Saturday, 23 August 2014

04.01.2014 அன்று நடந்த "பாரத மண்வாசனை" இலக்கிய நிகழ்ச்சி
அமைப்பாளர்: நண்பர் வீர.திருநாவுக்கரசு.

சான்றோர்கள் : 
பா.. மூத்த தலைவர் அய்யா இல.கணேசன்; 
மூத்த பத்திரிகையாளர் அய்யா சுப்பு; 
முனைவர் பேராசிரியர் அய்யா .வே.சு; 
பேராசிரியர் அய்யா சாமி தியாகராஜன் .




Thursday, 14 August 2014

சும்மாவா வீசிற்று சுதந்திரக் காற்று ?

நம் நாட்டை ஆண்ட மன்னர்களிடமோ ஒற்றுமை இல்லை, மக்களிடமோ அந்நியரை எதிர்க்க சரியான வழிகாட்டுதலில்லை, இயலாமை , கொடிய வறுமை , பயம் இப்படி பல காரணங்கள் ... எப்படியிருந்தாலும் விடுதலை பெற்றுத்தானே ஆகவேண்டும் ?

விடுதலை வேட்கையோடு களமிறங்கிய காளையர்கள் பலர், நம்மிடமோ கத்தியும், வேலும் , வில்லும் ,ஈட்டியும், சூலமும்...அந்நியரிடமோ துப்பாக்கியும், பீரங்கியும், வெடிகுண்டும்...இருந்தபோதும் துப்பாக்கியைத் துச்மென்றும், வெடிகுண்டை வெத்து வேட்டு என்றும் நினைத்துத் தம் உயரை மாய்த்துக் கொண்டவர் பலர் .

"அகிம்சை வழியே சிறந்தது" என்றார் காந்தி, "இரத்தம் கொடுங்கள் சுதந்திரம் பெற்றுத் தருகிறேன் " என்றார் நேதாஜி, இருவேறு பாதைகள் ஆனால் நோக்கம் ஒன்றுதான், அது பூரண சுதந்திரம் !

நம் மக்களிடமே நம் நாட்டைப்பற்றி இருந்த தவறான, கீழான, எண்ணங்களை, "நம்மால் சுதந்திரம் பெற முடியாது" என்று துவண்டு கிடந்த மனிதர்களைத் தன்னம்பிக்கையோடு "எழுமின்" என்றும், சாதியக்கொடுமைகள் முதல் பெண்ணடிமை வரை, அத்துனை ஏற்றத்தாழ்வுகளையும் உடைத்தெறிந்து நாட்டு விடுதலை ஒன்று தான் முக்கியம், "இந்தியா உலகின் குருவாக மாறும், பாரத அன்னை மீண்டும் தலை நிமிர்வாள்"    என்றார் வீரத் துறவி விவேகானந்தர்.    

இப்படி எண்ணற்ற தலைவர்களின் எண்ணத்தில், கனவில் , உயர்த்தியாகத்தில், கண்ணீரில், இரத்தத்தில் கிடைத்தது தான் நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரம்!


சும்மா வீசிவிடவில்லை சுதந்திரக் காற்று !   

"இரத்தத்தை வியர்வையாகச் சிந்திஉயிரை துச்சமென எண்ணிபோராடிஅடிபட்டுஉதைபட்டுசிறைசென்றுவதைபட்டுநம் முன்னோர் 
பெற்றுத்தந்தது தான் நம் சுதந்திரம்!"

ஹிந்து என்பது மதமல்ல, கலாச்சாரம் !

மதத்தில் நம்மிடம் வேறுபாடு இருக்கலாம் 
மொழியில் நம்மிடம் வேறுபாடு இருக்கலாம் 
உணவில் நம்மிடம் வேறுபாடு இருக்கலாம் 

ஆனால் நாம் அனைவரும் "இந்தியர்" என்ற ஒரே தேசிய இனம் !
இமையம் முதல் குமரி வரை இது ஒரே நாடு !
நாம் அனைவரும் ஒரே மக்கள் !

நம்முடைய விழாக்கள் , அடிப்படை திருமண முறைகள் , கலாச்சாரம், பண்பாடு, அனைத்தும் அனைவருக்கும் பொதுவானவையே ! நம்முடைய நாடு கலாச்சார ரீதியாக ஒன்றுபட்டுள்ளது ... அதன் பெயர் ஹிந்து கலாச்சாரம்...இங்கு "ஹிந்து" என்பது மதத்தின் பெயர் அல்ல கலாச்சாரத்தின் பெயர் ... 

சுவாமி விவேகானந்தர் கூற்றுப்படி ஹிந்து என்று சொல்லத்தேவையில்லை "வேதாந்தி" என்றுதான் சொல்லவேண்டும். அதற்கு வேதங்களைப் பின்பற்றுபவர் என்று பொருள்.

அரேபியர்களும் இதைத்தான் சொல்கின்றார்கள் ஹிந்து என்பது, ஹிந்து மதத்தை மட்டும் குறிக்கும்சொல்லல்ல அது இந்தியாவைக் குறிக்கும் சொல் என்று !

ஹிந்து என்பதற்கு இந்தியாவில் வாழும் மக்கள், இந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் இனம் என்பதுதான் சரியான பொருள் ! இதை முதலில் இங்கு இருக்கும் ஹிந்துக்கள் புரிந்தகொள்ள வேண்டும் !

ஹிந்து என்பது மதமல்ல, கலாச்சாரம் ! 

Wednesday, 6 August 2014

கல்வி நம் விருப்பம், நம் உரிமை !

"கல்வியென்பது அனைவரின் அடிப்படை உரிமை" இன்று அந்த உரிமையை யார் உரிமை கொண்டாடுவது என்பதில் தான் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே சலசலப்பு ஏற்படுகிறது. 

தங்களுடைய பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமை, ஒரு விதத்தில் சரியும் கூட, ஆனால் மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு தங்களுடைய மகனும்,மகளும் இப்படிதான் ஆகாவேண்டும் என்று எண்ணுவது, விரும்புவது தவறு.

இன்று அனைத்துப் பெற்றோர்களிடமும் தங்களுடைய பிள்ளை பொறியியல் படிப்புப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, இதில் தவறில்லை ஆனால் அதே சமயம் தங்களுடைய பிள்ளைகளின் விருப்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

"பக்கத்துவீட்டு உறவினர் மகள், எதிர்வீட்டு அத்தையின் மகன்,சித்தப்பாவின் பையன்,ஒன்றுவிட்ட மாமாவின் மகன்" பொறியியல் படிக்கிறார்கள் என்பதற்காகத் தங்களுடைய பிள்ளையும் பொறியியல் படித்தே ஆகா வேண்டும் என்பது சரியல்ல, வலுக்கட்டயமாக அவர்களைப் பொறியியல் படிக்க அனுப்பக்கூடாது. சிலருக்கு இயல்பாகவே பொறியியல் படிப்பின் மீது நாட்டம், ஈர்ப்பு, இருக்கும், சிலர் யாரையாவது (இயல்பாகவே உந்துதல் ஏற்பட்டு) பார்த்து  இவர்கள் போல ஆகா வேண்டும் என்று விரும்புவர். சிலர் ஏதாவது படித்தால் போதும் என்று இருப்பர்.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பதினொன்றாம் வகுப்பு முடிக்கும் முன்பே தங்களுடைய பிள்ளையின் விருப்பம், கனவு, இலட்சியம்,போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளிடம் அமர்ந்து மனம் விட்டுப் பேச வேண்டும், தினந்தோரும் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களும் சிறியவர்களும் ஒரு அரை மணி நேரமாவது அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் சந்தோசமாக மனம் விட்டு வீட்டு விஷயங்களைப் பற்றி பேசினால் அந்தக் குடும்பத்தில் சண்டை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதனால்த்தான் நம் முன்னோர், அனைவரும் குடும்பத்தோடு  அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினர். ஆனால் இன்றோ நம்முடைய பொக்கிஷமான பல மணி நேரங்களைத் தொலைக்காட்சிப் பெட்டிமுன் ரிமோட்டின் பிடியில் இழக்கிறோம்.

நாம் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசும்போது அவர்களின் உண்மையான விருப்பம் எது, எந்தத் துறையைச் சார்ந்தப் படிப்புகளை அவர்கள் விரும்புகிறார்கள், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும். பிள்ளைகளும் தங்கள் விருப்பம் சார்ந்தப்  படிப்பை பெற்றோரிடம் சொல்ல வேண்டும். ஆகா முதலில் பெற்றோரும் பிள்ளைகளும் கலந்து பேசி, சேர்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும், இது தான் முதல் நிலை. பிறகு அதற்கான வழிமுறைகள் என்ன, அந்த படிப்புக்கு என்ன மார்க் (மதிப்பெண்) பெற வேண்டும், இந்தப் படிப்புக்கு எந்த  கல்லூரி சிறந்தது, இந்தப் படிப்புக்கு ஏற்ற பல்கலைக்கழகம் எது என்று முடிவு செய்ய வேண்டும்.   

தமிழகத்தைப் பொருத்தவரையில் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு கிடையாது. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதுமானது. அதே போல தமிழகத்தில் மருத்துவப்படிப்பிற்கும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதுமானது. பொறியியல் மருத்துவ படிப்புகளுக்கு தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு கிடையாது.  
சில தனியார் பல்கலைக்கழகங்கள் அவர்களுகென்று தனியாக நுழைவுத் தேர்வை நடத்துகின்றன அவற்றையும் கவனிக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைக்குப் பிடித்த, ஏற்றப் படிப்பு ஏதேனும் கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் இருந்தால் அதற்கு ஏதேனும் நுழைவுத் தேர்வு இருக்கிறதா ? எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் ? நம்முடைய நிலையை எப்படி உயர்த்துவது ? என்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 
மருத்துவத்தில் விருப்பம் இருப்பவரைப் பொருளாதரத்தில் கொண்டு சேர்ப்பது, கலைத் துறையில் விருப்பம் இருப்பவரை பொறியியலில் சேர்ப்பது, பொறியியலில் விருப்பம் இருப்பவரை சமையல் படிப்பில் சேர்ப்பது எப்படி ஒரு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
ஆகா நம்முடைய வாழ்வின் எதார்த்தத்தைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்து, அவர்களின் விருப்பத்திற்கும் மதிப்பளித்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நல் வழி காட்டுவது ஒவொரு பெற்றோரின் கடமையாகும்.

ஆல் தி பெஸ்ட்.  

அ.பரிவழகன்